Showing posts with label Oneness. Show all posts
Showing posts with label Oneness. Show all posts

Thursday, July 7, 2011

மூதாதையர் குரல்

காமம் காமம் என்ப
காமம் அணங்கும் பிணியும் அன்றே, நினைப்பின்
முதைச்சுவர் கலித்த முற்றா இளம்புல்
மூதாதைவந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளாயே

பெரிய தோள் கொண்டவனே, காமம் காமம் என்று சொல்கிறார்களே அது தெய்வம் ஆவேசிப்பதோ அல்லது நோயோ அல்ல. நினைத்துப்பார்த்தால் மேட்டு நிலத்தில் முளைத்த இளம்புல்லை பல்போன பசு சப்பிப்பார்ப்பதைப்போல ஒரு தீரா விருந்து


http://www.jeyamohan.in/?p=3891&print=1



செவ்வியல் சாதாரணமாக உருவாகி வரக்கூடியதல்ல. செவ்வியலுக்குபின்னால் ஒரு நீண்டகால இலக்கிய வரலாறு இருந்தாகவேண்டும். கவிதைகள் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு செம்மைசெய்யப்பட்டு வந்திருக்க வேண்டும். அதன் விளைவாக அச்சமூகத்தில் கவிதையின் வடிவம் குறித்தும் உள்ளடக்கம் குறித்தும் ஒரு தெளிவு உருவாகி வந்திருக்கும். அதுவே செவ்வியல் இலக்கணமாக ஆகிறது

மேலும் அச்சமூகம் ஒரு பெரும் பண்பாட்டு பின்புலம் கொண்டதாக இருக்கவேண்டும். குடிமைநீதி கொண்டதாக, தத்துவ விவாதம் நிகழ்ந்து கொண்டிருப்பதாக அச்சமூகம் இருந்தாகவேண்டும். அப்போதுதான் செவ்வியலின் சாராம்சமாக இருக்கும் விவேகத்தை அச்சமூகம் அடைய முடியும். அதாவது கொல்லன் அழிசி ஒரு தனி மனிதன் அல்ல. அவன் ஒரு பெரும் பண்பாட்டு மரபின் துளி. கல்வி ஓங்கியிருந்த ஒரு சமூகத்தின் பிரதிநிதி

எந்த மனநிலை நம்மை உருவாக்கியது? இரண்டு அடிபப்டைக்கூறுகளை நான் சுட்டிக்காட்டுவேன். ஒன்று நம் குடும்ப அமைப்பு. நம்மில் பெரும்பாலானவர்களின் தாத்தாக்கள் பட்டினி கிடந்தவர்கள்தான். மாடுமேய்த்தவர்கள். பொட்டலில் உழுதவர்கள். அவர்கள் தங்கள் ஒவ்வொரு துளி குருதியையும் வியர்வையாக்கி தங்கள் அடுத்த தலைமுறையை உருவாக்கினார்கள். நம் அப்பாக்கள் பள்ளிக்குச் சென்றார்கள்.நம் அப்பாக்களின் குருதியை உண்டு நாம் கல்லூரிக்குச் சென்றோம்.

 அதைவிட முக்கியமானது நமக்கு கல்விமேல் உள்ள அபரிமிதமான பற்று. ஒவ்வொரு சாமானியனும் கல்வியை உள்ளூர மதிக்கும் தன்மை . தன் மகனுக்கு சரஸ்வதி கடாட்சம் வேண்டும் என்று சொன்ன அந்த எளிய தொழிலாளி ஒரு பெரும் பண்பாட்டின் சாரமான மனநிலையை வெளிக்காட்டுகிறார்.

ஆதிச்சநல்லூரில் உறங்கும் நம் மூதாதையர் நமக்கு விட்டுச்சென்ற செய்தி அதுவே. நாம் தோற்காதவர்கள். எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் எழும் மாபெரும் தேசம் நாம். ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு’ என உணர்ந்தவர்கள். அந்த செல்வமே நமக்கு பிற அனைத்துச் செல்வங்களையும் அளிக்கக்கூடியது

அந்த தேசத்துக்காக பெருமைப்படுங்கள். எங்கே வாழ்ந்தாலும் அந்த மகத்தான மண்ணின் அதில் உறங்கும் மூதாதையரின் வாரிசுகள் என்பதை மறவாதிருங்கள். அமெரிக்கா முழுக்க இதையே நான் சொன்னேன். அதை மீண்டும் இங்கே உறுதி செய்து முடிக்கிறேன். 


ref:  http://www.jeyamohan.in/?p=3891&print=1